இரண்டாம் முறையாக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் இந்திய அதிபர் மாளிகைக்கு முன்னால் நடந்த பதவியேற்பு விழாவில் அதிபர் ராம்நாத் கோவிந்த் அவ ருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி யின் தலைவரான அமித் ஷா முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, சதானந்த கௌடா ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்ற பாஜக தலைவர்களுள் முக்கியமான வர்கள். முன்னாள் வெளியுறவுச் செயலரும் சிங்கப்பூருக்கான முன்னாள் இந்தியத் தூதருமான எஸ்.ஜெயசங்கரும் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
பாஜக 303 இடங்களுடன் தனிப்பெரும் பான்மை பெற்றபோதும் கூட்டணிக் கட்சி களுக்கும் அமைச்சரவையில் இடமளித்து உள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் அரசில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டது.
மூத்த பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏறத்தாழ 8,000 பேர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
பதவியேற்பு விழாவையொட்டி முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிபர் மாளிகை பாதுகாப்புப் படை, டெல்லி போலிஸ், துணை ராணுவப் படை என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்களுடன் கிட்டத் தட்ட 10,000 போலிசாரும் போக்குவரத்துக் காவலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.