ரமலான் மாத இறுதி - உச்ச விழிப்புநிலையில் இந்தோனீசியா

ரமலான் மாத இறுதி - உச்ச விழிப்புநிலையில் இந்தோனீசியா

1 mins read
1755e628-a02d-4d31-ab9a-0266cc867b52
-

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த கலவரம், 1998ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் சுகார்த்தோவுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சியைப் பலருக்கு நினைவூட்டியது. இருந்தபோதும் இம்முறை போலிசார் வன்முறையைக் கட்டுப்படுத்தி அது தேசிய அவசரநிலையாக உருவாகாமல் தடுத்தனர். முஸ்லிம்களுக்குப் புனிதமான ரமலான் மாதம் நிறைவடையும் தருவாயில் அதிகாரிகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளனர். இது குறித்த போலிஸ் விசாரணையின் முடிவுகள் எப்போது வெளிவரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

கலவரத்திற்குப் பின்னணியில் கூலி வாங்கிய குண்டர்கள் செயல்பட்டதாக இந்தோனீசியாவின் பாதுகாப்பு அமைச்சர் விராண்டோ தெரிவித்தார். சுமார் 58,000 போலிஸ் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். சம்பவத்தின் தொடர்பில் இதுவரை 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆறு சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். மேலும், இரண்டு முன்னாள் ராணுவத் தளபதிகளுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக இந்தோனீசிய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவிடம் முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுப்பியாண்டோ தோற்றதை அடுத்து இந்த வன்முறைச் செயல்கள் மூண்டன. இதற்கு மூல காரணம் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகம்மது தெரிவித்தபோதும் அது குறித்த மேல் விவரங்களைச் சொல்ல மறுத்துள்ளார்.