ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரியும் நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
குறிப்பிட்ட சில வகைக் குற்றங்களில் ஈடுபடுவோரை சீனாவுக்கு அனுப்பி விசாரணை நடத்த அனுமதிக்கும் மசோதா
வுக்கு கடந்த வாரம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதனால் மசோதாவின் இரண்டாம் கட்ட வாசிப்பு சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் இருமுறை
ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்ப்பு அடங்காததால் நேற்று முன்தினம் செய்தியாளர்களைக் கூட்டிய திருவாட்டி லாம், மசோதாவை தற்போதைக்கு நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவெடுத்து இருப்பதாக அறிவித்தார்.
ஆயினும் இந்த மசோதாவை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் கூறினர்.
திருவாட்டி லாம் தமது தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலக
வேண்டும் என்று மேலும் சில தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இந்த மசோதா ஹாங்காங் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளைக் குறிவைத்து கொண்டு வரப்படுவதாக பலரும் கூறுகின்றனர்.
ஹாங்காங் நகரின் விக்டோரியா சதுக்கத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணிவாக்கில் பேரணி தொடங்கியது. அட்மிரல்டியில் உள்ள மத்திய அரசாங்க தலைமையகத்தை நோக்கி ஏராளமானோர் அணிவகுத்துச் சென்றனர். கறுப்பு நிற சட்டையுடனும் கையில் வெண்ணிற மலர் படத்துடனும் அவர்கள் காணப்பட்டனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பதாகை கட்டிக்கொண்டு இருந்த ஆதரவாளர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை கடைத்தொகுதி ஒன்றின் கூரையிலிருந்து கீழே தவறி விழுந்து மாண்டார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு அந்த மலர் அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.
அவர்களில் பலர் ஹாங்காங் குடிமக்களை சீனா அழிப்பதாகக் குறைகூறும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர். பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த ஹாங்காங் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் ஆட்சிப் பொறுப்பிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 'ஒரு நாடு; இரு ஆட்சி முறை' என்னும் உடன்பாட்டின் அடிப்படையில் அந்த ஒப்படைப்பு நடைபெற்றது.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்தனர். சுற்றி உள்ள வீதிகள் முழுவதும் மனிதக் கடலாகக் காட்சியளித்தன.
பேரணியில் பங்கேற்ற சிலர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் பேசினர். "மக்களின் குரலை அரசாங்கம் செவிமடுக்கவில்லை. கேரி லாம் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும்," என்று ஹெர்மன் மோ, 29, எனப்படும் மாணவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடத்தப்பட இருந்த புதன்கிழமையும் மக்கள் பெருமளவில் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது போராட்டம் வன்செயலாக மாறியது.
போலிசுடன் ஏற்பட்ட கைகலப்பில் 60 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் போலிஸ் தரப்பில் 22 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக புதன்கிழமை போலிஸ் கூறியிருந்தது.