இந்தியா சேர்ந்தால் வட்டாரப் பொருளியல் உடன்பாடு மேலும் வளம்பெறும்: ஈஸ்வரன்

இந்தியா சேர்ந்தால் வட்டாரப் பொருளியல் உடன்பாடு மேலும் வளம்பெறும்: ஈஸ்வரன்

2 mins read
60e839f6-d746-4ca3-9286-29ba4ef814e3
-
Google News Preferred Icon

விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவம், "தொலைநோக்கும் உயர் லட்சியங்களும் கொண்ட உடன்பாட்டுடன் இவ்வட்டாரத்தை ஒன்றுபடுத்த" முடியும் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறியிருக்கிறார். இந்த உடன்பாட்டில் இந்தியா அங்கம் வகிக்காவிட்டால் அது ஓர் இழப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.தென்காசியக் கல்விக் கழகமும் இந்தியத் தொழில்துறை சம்மேளனமும் கூட்டாக ஏற்பாடு செய்த சிங்கப்பூர் கருத்தரங்கில் திரு ஈஸ்வரன் பேசினார்.விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவம் இவ்வட்டாரத்தை ஒன்றுபடுத்தி, "நமது தொழில் நிறுவனங்களுக்கும் நமது மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித்தர" முடியும் என்று வியாழக்கிழமை (ஜூன் 20) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டார்.

ஆசியானின் 10 உறுப்பு நாடுகள், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருட்கள், சேவைகள், முதலீடுகள் ஆகியவற்றுக்கான தடையற்ற உடன்பாட்டை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த உடன்பாடு பல்வேறு தாமதங்களை எதிர்நோக்கியுள்ளது.குறிப்பாக, சீனாவுக்கு விதிக்கப்படும் தீர்வை குறைவதால் சீனத் தயாரிப்புகள் இந்தியச் சந்தையில் குவிந்து, வர்த்தகப் பற்றாக்குறை மோசமடையும் என இந்தியா கவலைப்படுகிறது. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2016-17 ஆண்டுகளில் 51 பில்லியன் வெள்ளியாக சீனாவுக்குச் சாதகமாக இருந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்பாடு இதுவரை இல்லை. இந்தியாவின் திறன்பெற்ற ஊழியர்களுக்கு உடன்பாட்டிலுள்ள நாடுகளில் அதிக இடம் கிடைப்பது இந்தியாவின் மற்றோர் அக்கறை.

இரண்டு நாள் வருகை மேற்கொண்டிருக்கும் திரு ஈஸ்வரன், தனது உரைக்குப் பிறகு இந்தியாவின் அக்கறைகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தார்."இத்தகைய உடன்பாட்டில் இருப்பது நல்லதா அல்லது உடன்பாட்டுக்கு அப்பால் இருப்பது நல்லதா என தொழில் மற்றும் உலகளாவிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து இந்தியா தன்னையே கேட்டுக்கொள்ளவேண்டும்...இந்தியா இதில் இடம்பெறாவிட்டால், அது ஓர் இழப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்," என்றார் அவர்.

இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சரான திரு நித்தின் கட்காரி, சிங்கப்பூரிலிருந்து இந்தியா படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். "ஆக வேகமாக வளர்ச்சியடையும் நாடு என்ற முறையில், சிங்கப்பூரின் வளர்ச்சி முறையிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்வது முக்கியம்," என்று அவர் கூறினார்.