ஜூரோங் தொழிற்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட பெட்ரோல் எரிவாயுத் தோம்புகள் (எல்பிஜி) வெடித்ததில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி ஒருவர் மரணமடைந்தார். மேலும் இருவர் காயமுற்றனர்.
எண் 43, ஜாலான் புரோவில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து நேற்று மாலை 5.10 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இரவு சுமார் 7.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரண்டு காற்பந்து விளையாட்டுத் திடல் அளவுள்ள வளாகத்தில் எல்பிஜி தோம்புகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு மூண்ட பெருந்தீயைக் கட்டுப்படுத்த பெருமளவிலான தீயணைப்புப் படை வீரர்கள் போராடினர். அருகிலிருந்த மற்ற எல்பிஜி தோம்புகளுக்கு தீ பரவாமல் தடுக்க அவர்கள் பெரும்பாடுபட்டனர். தீயணைக்கும் நடவடிக்கையில் ஏழு தண்ணீர் பீய்ச்சும் குழாய்களும் ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்த ஆகப் பெரிய எல்பிஜி தொடர்பான தீச்சம்பவம் இது என அதன் தரப்பில் கூறப்பட்டது.
ஊழியர்கள் இருவர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு 'எஸ்ஜிசெக்யூர்' கைபேசிச் செயலி வழியாக தகவல் அனுப்பப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
நேற்று மாலை 5.20 மணியளவில் பலத்த வெடிச் சத்தங்கள் பல கேட்டதாக பூன் லே அவென்யூவில் குடியிருக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் லிண்டா செங், 29, கூறினார்.
அவர் எடுத்த காணொளிகளில் தொலைதூரத்திலிருந்த கட்டடம் ஒன்றிலிருந்து கரும்புகை வெளியாவது தெரிந்தது. அந்தப் பகுதியில் எரியும் நாற்றமடித்ததாகவும் அவர் கூறினார்.
தீப்பற்றியதும் பொருட்கள் வைக்கும் கிடங்கிலிருந்து பலர் வெளியே ஓடியதாக எண் 47, ஜாலான் புரோவிலிருந்து சம்பவத்தைக் காணொளி எடுத்த ஒருவர் கூறினார். கிளமெண்டி போன்ற சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் மட்டுமின்றி பீஷானிலிருந்துகூட கரும் புகையைக் காண முடிந்ததாக பலர் தெரிவித்தனர்.