மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, மூன்று ஆண்டுகளில் பதவி விலகி திரு அன்வார் இப்ராஹிம் பிரதமராவதற்கு வழிவிடப்போவதாக அறிவித்திருக்கிறார். “என்னைப் பொறுத்தவரை, நான் பதவி விலகி அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பதாக ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளேன்,” என்று தாய்லாந்தில் தற்போது இருக்கும் அவர் 'சிஎன்பிசி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மலேசியாவின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காடாக இருப்பதாகக் கூறும் டாக்டர் மகாதீர், அதனை 50 விழுக்காட்டுக்குக் குறைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுவதாகக் கூறினார். இருந்தபோதும், அந்த இலக்கு எட்டப்படாவிட்டாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருக்கப்போவதில்லை என்று அவர் சொன்னார்.
திரு அன்வார், தாம் ஈராண்டுக்குள் பிரதமராகப் பதவி ஏற்கப்போவதாக எதிர்பார்ப்பதாக பிப்ரவரி மாதம் கூறினார். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர், அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் திரு அன்வார் பிரதமராவர் என்று கூட்டணிக் கட்சிகள் இணங்கியதாகக் கூறப்படுகிறது