பொருளியல் நிச்சயமின்மை இருந்தாலும் சிங்கப்பூரர்கள் பயப்படவேண்டாம் என்றும் விழிப்புடன் இருந்தாலே போதும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் இன்று தெரிவித்திருக்கிறார். ஏனெனில் சிங்கப்பூரர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அடிப்படைகளையும் பொருளியல் உத்திகளையும் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆசிய பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு கருத்தரங்கில் பேசிய திரு சான், உலகப் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். அனைத்துலக வர்த்தக பதற்றநிலை, சீனாவின் மெதுவடையும் பொருளியல், பிரெக்சிட் தொடர்பான நிச்சயமின்மை, உலக வர்த்தக அமைப்பின் மீதான நெருக்கடி ஆகியவற்றையும் அவர் சுட்டினார். நலிவடைந்த உலகளாவியத் தேவை சிங்கப்பூரின் வர்த்தக வளர்ச்சியைப் பாதிக்கும் என எதிர்பார்ப்பதாகத் திரு சான் தெரிவித்தார். இருந்தபோதும், தென்கிழக்காசிய வட்டாரத்தில் கால்பதிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் பாதுகாப்பான அரணாகத் தொடர்ந்து திகழ்வதாக அவர் கூறினார். திறன்கள், அறிவுசார் சொத்துகளுக்கான பாதுகாப்பு, புத்தாக்கம், ஆய்வு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் மையமாகத் திகழ்வதாகவும் திரு சான் சொன்னார்.
திறன்மிக்க ஊழியரணியை உருவாக்குவதில் சிங்கப்பூர் அரசாங்கம் பெருமளவு முதலீடு செய்து வந்தாலும், இறுதியில் நிறுவனங்களும் ஊழியர்களும் தங்களுக்கான திறன் மேம்பாட்டுக்குப் பொறுப்பேற்று அதற்கான பயிற்சிகளில் முதலீடு செய்யவேண்டும் என்றார் திரு சான்.