அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போரால் முதலீடு, இரு நாட்டு வர்த்தகம், உற்பத்தித் துறை ஆகியவை பாதிப்படையும் நிலையில் சிங்கப்பூரின் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கெனவே இவ்வாண்டுக்கு முன்னுரைக்கப்பட்ட 1.5 -2.5 விழுக்காடு பொருளியல் வளர்ச்சி விகிதத்தை மேலும் மறுபரிசீலனை செய்கின்றனர்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையிலான பொருளியல் வளர்ச்சி 1.2 விழுக்காட்டைவிட மேலும் குறைவாக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் ரவி மேனன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பொருளியல் சவால்மிக்கக் காலக்கட்டத்தை எதிர்நோக்குகிறது. இருந்தாலும் அது நல்ல நிலையில் இருப்பதாகத் திரு மேனன், ஆணையத்தின் அறிக்கையை வெளியிடும்போது தெரிவித்தார். “நாம் விழிப்பாக இருக்கவேண்டும், ஆனால் பயமடையத் தேவையில்லை,” என்று அவர் கூறினார்.
ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் பொருளியல்மீது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.