தொழில்நுட்பப் பொருட்களை விற்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் சிங்கப்பூரில் தனது இரண்டாவது கடையை சாங்கி விமான நிலையத்தின் ஜூவல் சாங்கி வளாகத்தில் திறக்கவுள்ளது. ஜூலை 13ஆம் தேதி அந்தக் கடை திறக்கும். ஜூவல் சாங்கி, மரினா பே சேண்ட்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் ‘ஆப்பிள்’ நிறுவனம் கடைகளை அமைக்கப்போவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ மார்ச் மாதம் தெரிவித்தது.
ஜூவலில் அமையப்போகும் கடையின் பரப்பளவு போன்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், ‘ஆப்பிள்’ கடைகளில் வழக்கமாக விற்கப்படும் பொருட்களான ஐ-போன் திறன்பேசிகள், மடிக்கணினிகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் இங்கும் எதிர்பார்க்கலாம். நிரலிடுதல், செயலிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய சிறிய வகுப்புகளும் அங்கு நடத்தப்படும். ஒரு சில புதிய அம்சங்கள் சாங்கி ஜூவலிலுள்ள ‘ஆப்பிள்’ கடையில் பிரத்யேகமாக இடம்பெறும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 500 மீட்டர் நீளமான நிழற்பட நடை இவற்றில் ஒன்று. இந்த நடையின்மூலம் ஜுவல் சாங்கியின் நீர்வீழ்ச்சி, அதன் உள்புறத் தோட்டங்கள் ஆகியவற்றைப் படம் அல்லது காணொளி எடுக்க வாடிக்கையாளர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
2017ஆம் ஆண்டு மே மாதம் ஆப்பிள் முதன்முதலாக ‘நைட்ஸ்ப்ரிட்ஜ்’ கடைத்தொகுதியில் தனது முதல் கடையைத் திறந்தது. அப்போது அது தென்கிழக்காசியாவின் முதல் ‘ஆப்பிள்’ கடையாகவும் இருந்தது.