வடகொரிய எல்லையிலுள்ள ராணுவமற்ற பகுதிக்குள் நேற்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை நோக்கி நடந்து சென்ற அமரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவருடன் கைகுலுக்கினார். இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் வடகொரிய மண்ணில் கால் வைத்ததில்லை. இப்போது 69 ஆண்டுகளுக்குப் பின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்துள்ளது.
வடகொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் ராணுவ எல்லைக் கோட்டின் இரு புறங்களிலும் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் நின்றவாறு கைகுலுக்கினர். இதைத் தொடர்ந்து எல்லைக் கோட்டைத் தாண்டி திரு டிரம்ப் வடகொரிய பகுதிக்குச் சென்றார். அங்கு மீண்டும் இரு தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
"அந்த எல்லைக் கோட்டை தாண்டிச் செல்வதை நான் ஒரு பெரிய கௌரவமாக கருதுகிறேன், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, நட்புறவுகள் வலுவடைந்துள்ளன, அதிலும் குறிப்பாக இது சிறந்த நட்பாக மாறியுள்ளது," என்றார் திரு டிரம்ப்.
அவர் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து, இது தைரியத்தையும் உறுதியையும் காட்டும் ஒரு செயல்," என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார் திரு கிம்.
இதற்கிடையே எந்த ஒரு தடை ஏற்பட்டாலும் இரு தலைவர் களுக்கிடையே உள்ள உறவு அதை எதிர்கொள்ள உதவும் என்று திரு கிம் சொன்னார்.
ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி அதிபர் டிரம்ப் செல்ல நினைப்பதை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டார். இரு தலைவர்களும் தென்கொரியாவின் 'ஃபிரீடம் ஹவுசில்' ரகசிய பேச்சு நடத்திய பிறகு திரு கிம் வடகொரியா திரும்பினார்.