வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ராணுவமற்ற எல்லைப்பகுதிக்குள் சென்ற திரு டிரம்ப், அதிபராகப் பதவி ஏற்றிருக்கும்போது வடகொரியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதிக்குள் சென்ற முதல் அமெரிக்க அதிபர் ஆவார்.
திரு டிரம்ப்புக்கும் திரு கிம்முக்கும் இடையே இணக்கம் தென்பட்டபோதும், அதனால் இப்போதைக்குப் பெரும் மாற்றங்கள் நிகழாது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.இரு தலைவர்களுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள் ஜூலை மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார்.
ஒரே நாளில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்குத் திரு டிரம்ப்புடன் தாம் கொண்டுள்ள நல்லுறவு காரணம் என்றும் இந்த உறவு தொடரும் என்றும் திரு கிம் தெரிவித்ததாக வடகொரிய ஊடகம் கூறியது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இந்தச் சந்திப்பை வரவேற்பதாக அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.