ஹாங்காங்கின் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் திங்கட்கிழமை (ஜூலை 1ஆம் தேதி) வல்லந்தமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
“அவர்கள் ஜனநாயகத்தைத்தான் நாடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர் என நான் நினைக்கிறேன். ஆனால் சில அரசாங்கங்கள் ஜனநாயகத்தை விரும்பவில்லை,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
ஹாங்காங்கில் தற்போது நிலவும் பதற்றம் வருத்தத்திற்குரியது என்று திரு டிரம்ப் முன்னதாகத் தெரிவித்தார்.
உத்தேச ‘நாடு கடத்தும்’ சட்டத்திற்கு எதிராகப் போராடும் ஹாங்காங் மக்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. சீனா அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நியாயமற்ற முறையில் தனது மக்களுக்குத் தண்டனை விதிக்கக் கூடும் என்பதே அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் அச்சம்.