ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியில் நேர்ந்த கைகலப்பில் 31 வயது சதீஷ் நொவல் கோபிதாஸ் கொல்லப்பட்டதன் தொடர்பில் எழுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
22 வயது நெட்டலி சியாவ் யூ சென், 26 வயது ஜொவெல் டான் யுன் ஷெங், 26 வயது சான் ஜியா சிங், 26 வயது ஆங் டா யுவன், 27 வயது டான் சென் யாங், 25 வயது லூ பூன் சோங், 22 வயது டான் ஹொங் செங் ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 6.25 மணிக்கு அந்த எழுவரும் திரு சதீஷைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையைக் காண இருபதுக்கும் மேற்பட்ட திரு சதீஷின் குடும்பத்தாரும் நண்பர்களும் சென்றிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இரு பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்திருப்பதாக போலிசார் நேற்று தெரிவித்தனர். எட்டாவது நபரின் மீதான விசாரணை தொடர்வதாக போலிசார் கூறினர்.
அந்தக் கும்பலில் ஒருவரைத் திரு சதீஷ் அணுகியதை அடுத்து அவருக்கும் அந்தக் குழுவுக்கும் இடையே நிகழ்ந்த கைகலப்பு கடைத்தொகுதியின் முதலாம் மாடியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளியில் தென்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் வெளியேறியது. திரு சதிஷ், கட்டடத்தின் கண்ணாடிக் கதவுகளின் மீது விழுந்தார்.
டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
அதிகாலையில் கூச்சல்களைக் கேட்டதாகக் கூறிய ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைக்காரர்கள், அந்தக் கைகலப்பு இரண்டாவது மாடியிலுள்ள ‘நாட்டி கர்ல்’ கேளிக்கை விடுதியில் தொடங்கியிருக்கக்கூடும் என நம்புவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம்’ தெரிவித்தனர்.