ஜனநாயக உரிமைகளைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங்கின் சுற்றுலாப் பகுதியில் சூழ்ந்ததைத் தொடர்ந்து போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஹாங்காங்கிற்குச் சென்றிருந்த சீனப் பயணிகளிடையில் தங்களது போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் முயல்வதாகக் கூறப்படுகிறது.
அந்நகரின் ‘சிம் ஷா சுய்’ பகுதியில், சீனாவுடன் இணைக்கும் அதிவேக ரயில் நிலையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று காலை சென்றிருந்தனர். மாலை வேளைக்குள் அந்த ரயில் நிலையத்தின் வாசல் அடைக்கப்பட்டிருந்ததை அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனர். ஆயினும் இரவு 9 மணி வரை அவர்கள் அந்த நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கும் கலகத்தடுப்பு போலிசாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் இன்று காலை தெரிவித்தனர்.
20 வயதுக்கும் 66 வயதுக்கும் இடையிலான நான்கு ஆடவர்களும் இரண்டு பெண்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.