சாங்கி விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்திற்குள் இரண்டு ஆளில்லா வானூர்திகள் அனுமதியின்றி பறக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இனி எல்லா வானூர்திகள் பதிவு செய்யப்படவேண்டும் என்று திங்கட்கிழமை ( ஜூலை 9) நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான தண்டனை கடுமையாக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெரிய, அதிக சக்திவாய்ந்த வானூர்திகளை இயக்குபவர்களுக்கான புதிய உரிம விதிமுறைக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்படும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அந்த விதிமுறைகள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறவில்லை.
தற்போதைய விதிமுறைகளின்படி உரிய அனுமதியின்றி வானூர்திகள் 61 மீட்டருக்கு மேல் உயரமாகப் பறக்கவிட முடியாது. அத்துடன் அவற்றை விமான நிலையங்கள் அல்லது ராணுவத் தளங்களுக்கு 5 மீட்டர் தூரத்திற்குள் இயக்க முடியாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 20,000 வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.