ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கெர்ரி லாம், பெரும் அரசியல் அமளியை விளைவித்த ‘நாடுகடத்தும்’ மசோதா ‘உயிரற்று இருக்கிறது’ என்றும் அதன் தொடர்பான அரசாங்கப் பணிகள் தோல்வி அடைந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஹாங்காங்கில் உள்ளோர் சீனாவில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க வழிசெய்யும் இந்த மசோதாவை எதிர்த்துப் பொதுமக்கள் கொந்தளித்தனர். 1997ஆம் ஆண்டு சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட ஹாங்காங்கின் நிர்வாகம் வேறுபட்டதாக உள்ளது. ஆயினும், ஹாங்காங்கின் தனித்துவமான நிர்வாக முறையில் சீனா குறுக்கிட்டு மனித உரிமைகளை அழிக்க முயல்வதாக ஹாங்காங் வாசிகள் கருதுகின்றனர்.
ஹாங்காங்கில் நிகழும் யாவற்றுக்கும் தாமே பொறுப்பு என்றார் திருவாட்டி லாம். ஆயினும், ஒரு சிலரைத் தவிர ஆர்ப்பாட்டம் செய்த தமது மக்களில் பெரும்பாலானோர் அகிம்சையைக் கடைப்பிடித்ததை நினைத்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார். மக்கள் தொடர்ந்து இதுபோல அமைதியைக் கடைப்பிடிக்க தாம் உளமார வேண்டுவதாகத் திருவாட்டி லாம் கூறினார்.