ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் மூவர் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
22 வயது டான் ஹோங் ஷெங், 25 வயது லூ பூ சோங், 26 வயது சான் ஜியா சிங் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுகள், பொது இடத்தில் ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு சென்ற ஒருவருடன் சேர்ந்திருந்ததாகக் குறிப்பிடும் குற்றச்சாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
டானுக்கும் சானுக்கும் தலா 25,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது. லூவின் பிணைத் தொகை 15,000 வெள்ளி. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி இம்மூவரும் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படுவர்.
எஞ்சிய நான்கு சந்தேக நபர்கள் இன்னமும் ஆளுக்கு ஒரு கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை. 22 வயது நெட்டலி சியாவ் யூ சென், 27 வயது டான் சென் யாங், 26 வயது ஜொவெல் டான் யுன் ஷெங், 26 வயது ஆங் டா யுவன் ஆகியோர் அந்த நால்வர்.
குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவோர் மீது மறுபடியும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்படமுடியாது.
ஜூலை 2ஆம் தேதி ஆர்ச்சர்ட் டவர்ஸில் நிகழ்ந்த கைகலப்பில் திரு சதீஸ் நொவல் கோபிதாஸ் உயிரிழந்தார். அவரது கொலையின் தொடர்பில் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த எழுவரில் டான் சென் யாங் மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின்போது டானிடம் ‘கெரம்பிட்’ எனப்படும் வளைவான கத்தி இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய போலிஸ் பிரிவின் தடுப்புக் காவலில் அவர் வைக்கப்படுவார் என்றும் ஜூலை 18ஆம் தேதி அவர் நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
சியாவ், ஜொவெல் டான், ஆங் ஆகியோர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். டானும் ஆங்கும் சாங்கி சிறை வளாக மருத்துவ நிலையத்தில் தடுத்துவைக்கப்படுவர். சியாவ் சாங்கி பெண்கள் சிறையில் இருப்பார். அவர்கள் மூவரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.