கோடானு கோடி மனங்களை வென்ற இந்திய அணி

கோடானு கோடி மனங்களை வென்ற இந்திய அணி

2 mins read
9a0f4513-4085-4e38-9629-335dce9e6d5f
நேற்று முன்தினம் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் இப்படி பல ரசிகர்கள் வருத்தத்துடன் காணப்பட்டனர். படங்கள்: ராய்ட்டர்ஸ் -

கிண்ணம் வெல்வது திண்ணம் என்று நாடே எதிர்பார்த்திருக்க, இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டது ஒட்டுமொத்த இந்தியா வையும் ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியது. உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான அரையிறுதிப் போட்டி யில் இந்திய அணி 18 ஓட்டங் களில் தோற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை நேற்று முன்தினம் இழந்தது. ஆனாலும், தொடக்கத்திலேயே பெரும் சரிவைச் சந்தித்த நிலையில் உடனே தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மனம் துவளாது இறுதி வரை இந்திய அணியினர் களத்தில் வெளிப்படுத்திய போராட்ட குணம் கோடானு கோடி ரசிகர்களின் உள்ளங்களை வென்று தந்துள்ளது. அவர்களுள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.

"ஏமாற்றமளிக்கும் முடிவு. இருப்பினும், இறுதிவரை இந்திய அணி போராடியதைப் பார்க்க அருமையாக இருந்தது. உலகக் கிண்ணத் தொடர் முழுமையும் இந்திய வீரர்களின் பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு சிறப்பாக இருந்தது. வெற்றியும் தோல்வியும் வாழ்வின் அங்கமே," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நூறு கோடி மனங்களின் இதயங்கள் நொறுங்கியபோதும் மிகச் சிறந்ததொரு போராட்டத்தை வெளிப்படுத்திய நீங்கள் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்கள்," எனத் தெரிவித்துள்ளார்.

முதல் 45 நிமிடத்தில் ஆடிய மோசமான ஆட்டமே தங்களைத் தொடரிலிருந்து வெளியேற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார் இந்திய அணித்தலைவர் கோஹ்லி.

"பெரும் எண்ணிக்கையில் நேரில் வந்து ஆதரவளித்த எல்லா ரசிகர்களுக்கும் நன்றி. உங்களது அன்பால் மறக்க முடியாத தொட ராக மாற்றிவிட்டீர்கள். நாங்கள் எல்லாருமே ஏமாற்றமடைந்துள் ளோம். எங்களால் முடிந்த அள வுக்குப் போராடினோம்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் கோஹ்லி பதிவிட்டுள்ளார்.

பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு முன்னதாகவே டோனியை ஆட்டத்தில் களமிறக்காதது பெரும் தவறு என சச்சினும் கங்குலியும் குறிப்பிட்டனர். பத்து பந்துகளில் 25 ஓட்டங் களை எடுக்க வேண்டியிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக டோனி ஆட்டமிழந்தார். அவர் 50 ஓட்டங்களை எடுத்தார். இதனிடையே, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டோனி 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ரசிகர் ஒருவர் மரணமடைந்தார். கோல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த மைத்தி என்ற அந்த ரசிகர் தமது கைபேசியில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அதிர்ச்சியில் திடீரென கீழே விழுந்து மாரடைப்பில் இறந்துவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது.

2019-07-12 06:10:00 +0800