மூன்றில் ஒரு சிங்கப்பூரர்கள் முதலீடு செய்வதில்லை என்றும் முதலீடு செய்வதை ஒருவித சூதாட்டமாக அவர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. ஓசிபிசி வங்கி முதன்முறையாக நடத்திய நிதி நலன் தொடர்பான அந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானோர் ஓய்வு காலத்திற்குத் தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வயதாகும் பெற்றோரையும் தங்களது சொந்த பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்வோர் நிதிநிலையைச் சமாளிப்பதற்கு சிரமப்படுகின்றனர். சராசரி சிங்கப்பூரருடன் ஒப்பிடுகையில் நிதிநிலைக் குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர். ஓசிபிசி வங்கியின் இந்த ஆய்வில் 21 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட 2,000 பெரியவர்கள் பங்கெடுத்தனர்.
ஒட்டுமொத்தமாக, 100க்கு 63 மதிப்பெண்களைச் சிங்கப்பூர் பெற்றது. நிதி நிலன் தொடர்பான விவகாரங்களில் சிங்கப்பூரர்கள் கவனம் செலுத்தினாலும் பல அம்சங்களில் அவர்கள் பின்தங்கி இருப்பதை இந்த மதிப்பெண் காட்டுகிறது.
மொத்தம் 26 அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்டன. பண சேமிப்பு விகிதம், முதலீடுகள், ஓய்வுகாலத்திற்கு திட்டமிடுதல், நெருக்கடியின்போது போதுமான நிதி இருப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். நிதி தொடர்பான அடிப்படையான விவகாரங்களில் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் புரிந்து வைத்திருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மாதச் சம்பளத்தில் சராசரியாக 26 விழுக்காட்டை அவர்கள் சேமிக்கின்றனர். அத்துடன், 82 விழுக்காட்டினர் காப்புறுதி வைத்துள்ளனர்.
ஆனால் முதலீடுகள் என வரும்போது அவர்கள் சிறப்பாகச் செய்யவில்லை. ஏறக்குறைய 34 விழுக்காட்டினர் முதலீடு செய்வதில்லை. அதே வேளையில், முதலீட்டாளர்களில் 36 விழுக்காட்டினரின் முதலீடுகள் இலக்கை எட்டுவதில்லை.

