முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது ஆய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
இதற்குமுன் 1979, 1987, 1992ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் அந்த அணியின் கிண்ணக் கனவு நனவாகவில்லை. அந்த
ஏக்கம் நேற்று முன்தினம் இரவில் தீர்ந்தது.
மாறாக, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்று நியூசிலாந்து ஏமாற்றமடைந்தது.
லண்டன் லார்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பந்தடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை எடுத்தது.
அதன்பின் பந்தடித்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து, வெற்றியாளரை முடிவுசெய்ய 'சூப்பர் ஓவர்' முறை பின்பற்றப்பட்டது. அதிலும் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்களை எடுத்து வியப்பளித்தன.
ஆனாலும், அதிக பவுண்டரிகளை விளாசிய அணி என்ற விநோதமான விதியின் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி 26 பவுண்டரிகளையும் நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகளையும் அடித்தன.
ஆட்ட நாயகனாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சும் தொடர் நாயகனாக
வில்லியம்சனும் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் இந்திய கிரிக்கெட் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர்.
2011ல் இந்தியா, 2015ல் ஆஸ்திரேலியா, இம்முறை இங்கிலாந்து என அடுத்தடுத்து மூன்று முறையும் உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்திய அணிகளே கிண்ணத்தைக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.