மலேசிய இந்தியர்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் புதிய அரசியல் கட்சி ஒன்றின் துவக்கத்தை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் பி. வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.
“எம்ஏபி எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி இன்று அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. மன்றங்களுக்கான பதிவகத்தில் இந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்,” என்று திரு வேதமூர்த்தி கூறினார்.
இந்திய சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு, சமயம் மற்றும் சமுதாயம் சார்ந்த நலன்களைப் பேணி முன்னேற்றுவது இந்தக் கட்சியின் நோக்கம் என்று அவர் இன்று வெளியிட்ட தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் கீழ் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையும் வாய்ப்பும் புத்துயிர் பெற்றுள்ள நிலையில் அவர்களைச் சரியான முறையில் பிரதிநிதிக்கும் முக்கிய பணியை ஆற்றும் என்பதை மக்கள் இயக்கமான தனது கட்சி உறுதி செய்யும் என்று திரு வேதமூர்த்தி கூறினார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் தற்போது உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் தனது கட்சி நல்ல, ஆக்கபூர்வமான முறையில் இணைந்து பணியாற்றும் என்றார் அவர்.
இந்தப் புதிய கட்சிக்குத் தலைமையேற்பதால் ‘ஹின்ட்ராஃப்’ இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதாகத் திரு வேதமூர்த்தி கூறினார். பொதுக்கூட்டம் ஒன்றில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.