போதைப்பொருள் புழக்கத்திற்கு அடிமையாவதைக் குற்றமற்றதாக்குவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் கலந்தாலோசித்துள்ளன. இரு நாடுகளும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் எதிர்கால ஒத்துழைப்பு பற்றி பேசியதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் நேற்று கூறினார்.
“போதைப்பொருள் புழக்க விவகாரத்தில் இனி நாங்கள் செயல்படவேண்டிய விதம் குறித்து தெரிந்துகொள்ள விருப்பப்பட்டோம். போதைப்பொருள் உட்கொண்டு சிறைக்கு செல்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல என்பதே எங்களுடைய தற்போதைய நிலைப்பாடு,” என்றார் திரு முஹைதீன்.
சிங்கப்பூர் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் திரு முஹைதீன் இவ்வாறு கூறினார்.
போதைப்பொருளுக்கு அடிமையாவதையும் சொந்த பயன் பாட்டுக்கு போதைப்பொருள் வைத்திருப்பதையும் குற்றமற்றதாக்கும் பரிந்துரை அமைச்சர்நிலை அளவில் இன்னும் விவாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், போதைப்பொருள் தொடர்பான கடுமையான குற்றங்கள் என வரும்போது ஏற்கெனவே நடப்பில் உள்ள தண்டனையை அரசாங்கம் தொடர்ந்து விதிக்கும் என்று திரு முஹைதீன் தெரி வித்தார்.
“சிகிச்சைக்காக அவர்கள் அதைப் பயன்படுத்தினால் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். ஆனால் கடுமையான குற்றங்களுக்கு நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்,” என்றார் அவர்.
இரு நாட்டு உள்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது, கட்டாய மரண தண்டனையைப் பொறுத்தவரை மலேசியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக திரு முஹைதீன் கூறினார்.
எல்லைப் பாதுகாப்பு குறித்தும் இரு அமைச்சர்கள் கலந்தாலோ சித்தனர்.
“பலதரப்பட்ட விவகாரங்களைத் தீர்க்க எங்களது நாட்டு எல்லையில் பாதுகாப்புப் படையை அமைப்பது குறித்த தேவையை நான் தனிப்பட்ட முறையில் முன்வைத்தேன்,” என்றார் திரு முஹைதீன்.