கரையோரப் பூந்தோட்டத்திற்கு அருகே தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலைத் தீயில் எரித்த லெஸ்லி கூ குவீ ஹோக், கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
31 வயது பெண் பொறியாளர் சுய் யாஜியேயை கூ கொலை செய்ததாக நீதித்துறை ஆணையர் ஆட்ரே லிம் உறுதி செய்தார்.
குமாரி சுய்யின் கழுத்தை இறுக்கமாகப் பிடிப்பதால் அவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்பது கூவுக்கு நன்றாகவே தெரியும் என்று நீதித்துறை ஆணையர் கண்டுபிடித்தார். அந்தப் பெண்ணின் கழுத்தை நெரிக்க முற்பட்டபோதும் அவரைக் கொல்வது தமது நோக்கமல்ல என்று கூ கூறியது நம்பத்தகாதது என்று ஆணையர் கூறினார்.
மாண்டுபோன பெண் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக கூ கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. கூவைவிட சுய் உருவத்தில் மிகச் சிறியவர் என்பதால் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நீதித்துறை ஆணையர் கூறினார்.
மாறாக, 20,000 வெள்ளி கடனை அடைக்க கூவை சுய் வற்புறுத்தியதால் அவரைக் கொலை செய்ய கூவுக்குக் காரணம் உள்ளது என்று கூறப்பட்டது.
கரையோரப் பூந்தோட்டத்திற்கு அருகே சுய்யைத் தனது காரில் கொன்ற பிறகு அவரது சடலத்தை லிம் சூ காங் லேன் 8ல் பல நாட்களாக எரித்ததை கூ மறுக்கவில்லை.