நியூயார்க், லண்டன், சன் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களைவிட ஹாங்காங்கின் வீட்டு வாடகை அதிகம். அடுக்குமாடி வீட்டின் பரப்பளவோ மற்ற நகரங்களைவிட பாதிக்கும் குறைவு. ஹாங்காங்கில் ஐந்தில் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 4.82 அமெரிக்க டாலரைக் காட்டிலும் குறைவாகவே சம்பாதிக்கிறார்.
7.4 மில்லியன் பேர் வசிக்கும் பாதி சுயாட்சியுள்ள நகரமான ஹாங்காங், உலகிலேயே அதிக ஏற்றத் தாழ்வு கொண்டுள்ள இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 1990கள் வரைக்கும் பிரிட்டனின் காலனியாக இருந்துவந்த ஹாங்காங்கின் மக்கள், சீனாவின் ஆதிக்கம் எல்லை மீறிப் போவதாகக் கருதுகின்றனர். ஆயினும், அரசியல் ரீதியான இந்தக் கோபத்தின் பின்னணியில் பொருளியல் எதிர்காலம் குறித்த அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.
“கல்வித்தகுதி உயர்ந்தால் வருமானமும் உயரும் என நாங்கள் எண்ணினோம். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, பட்டப்படிப்பை முடித்தவர்கள்கூட அதிகம் சம்பாதிக்க முடிவதில்லை,” என்கிறார் கல்லூரியில் படித்துள்ள 55 வயது ஆர்ப்பாட்டக்காரர் கென்னத் லியூங். தற்போது அவர் பாதுகாவலராகப் பணியாற்றுகிறார். தனது நிலையை எண்ணி அவர் கோபத்திலும் வேதனையிலும் ஆழ்ந்திருக்கிறார்.
ஹாங்காங்கின் அடுக்குமாடி வீடுகளில் பெரும்பாலானவை மிகச் சிறிய பரப்பளவைக் கொண்டுள்ளன. சில வீடுகள் மிகவும் குறுகியதாக இருப்பதால் அவற்றைக் கூண்டுகள் என்றும் சவப்பெட்டிகள் என்றும் பலர் விரக்தியுடன் வர்ணிக்கின்றனர்.
குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்களை சீனாவுக்கு ‘நாடுகடத்தும்’ சட்ட மசோதாவை எதிர்த்து தற்போது வலுவான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அந்நகரத்தின் நிர்வாகி கெர்ரி லாம் மீது மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதல் அரசியல் சுதந்திரம் தங்கள் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் என ஹாங்காங் மக்கள் கருதியபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த மர்ம நபர்கள், ஹாங்காங் பொதுமக்களைத் தாக்கியதால் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான இந்தப் போட்டியில் பொருளியலின் நிலை என்னவாகும் என்பதே இப்போது அனைவரின் கவலை.