பாலியிலுள்ள ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களைத் திருடிய இந்திய குடும்பம் பிடிபட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. டுவிட்டர் பயனீட்டாளர் ஹேமநாத் தமது பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்த அந்தக் காணொளி இதுவரை 317,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், ஹோட்டல் ஊழியர்கள் என நம்பப்படும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அந்தக் காணொளி காட்டியது.
ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர் குடும்பத்தினரின் பயணப் பெட்டியிலிருந்து ஹோட்டல் அறையின் சவர்க்காரம், துண்டுகள், கண்ணாடி, முடிகாயும் இயந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்ததைக் காணொளி காட்டியது.
“நான் இதுவரை பார்த்த மக்களில் இந்தோனீசியர்கள் மிக மென்மையானவர்களாகவும் கனிவானவர்களாகவும் உள்ளனர் என்று இந்தோனீசியாவில் வசித்து பாலிக்குச் சென்றுள்ள என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று திரு ஹேமநாத் தமது பதிவில் கூறியுள்ளார்.
இந்தியாவையும் இந்தியர்களையும் இவர்கள் பெரிதும் மதிப்பதால் இத்தகைய ஒரு சம்பவம் இந்தியர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். திரு ஹேமநாத்தின் கருத்துகளுக்குப் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியர்கள் அனைவரும் இப்படி இல்லை என்றும் சிலர் பதிவிட்டனர்.