முன்யோசனையின்றி கூறப்படும் கருத்துகளும் கவனக்குறைவில் விடப்படும் வார்த்தைகளும் இணையத்தில் வேகமாகப் பரவலாம். அதனால் பல இன மக்கள் கொண்ட சிங்கப்பூர் சமுதாயத்தின் நல்லிணக்கம் சிதைக்கப்படலாம் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார்.
எம்ஆர்டி ரயில் நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் போலிசார் மலாய்க்காரர்களை அதிகமாகக் குறிவைப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய திருவாட்டி டியோ, உள்துறை சீருடைக் குழுக்களின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதே அத்தகைய குற்றச்சாட்டுகளின் நோக்கம் என்றும் சொன்னார்.
“நமது சமுதாய ஒற்றுமையை உடைக்க முயலும் வெறுப்புமிக்க பேச்சுகளுக்கும் மற்ற முயற்சிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை நாம் இருமடங்கு முடுக்கிவிடவேண்டும்,” என்றார் திருவாட்டி டியோ.
உள்துறை அமைச்சின் தேசிய தின நிகழ்ச்சியில் திருவாட்டி டியோ உள்துறை அமைச்சு அதிகாரிகளிடமும் தொண்டூழியர்களிடமும் பேசியபோது அவ்வாறு கூறினார்.
சமய நல்லிணக்கத்திற்குக் கெடுதல் விளைவிக்கும் அம்சங்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது தொடர்பான சட்டம் புதுப்பிக்கப்படும் என்றார் திருவாட்டி டியோ.