சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் அதிகரித்துவரும் பதற்றநிலை, திக்குமுக்காடும் உற்பத்தித்துறை ஆகியவற்றால் இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. சிங்கப்பூரின் முழு ஆண்டு வளர்ச்சி 0 விழுக்காட்டுக்கும் 1 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்ற முன்னுரைப்பை வர்த்தக, தொழில் அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக 1.5க்கும் 2.5க்கும் இடையே இருந்த அந்த முன்னுரைப்பு இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளில் இது ஆகக் குறைவான வளர்ச்சியாக உள்ளது. 2009ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடு சுருங்கியது குறிப்பிடத்தக்கது. இன்று அரசாங்கம், எண்ணெய் சாரா உற்பத்திகளுக்கான தனது முழு ஆண்டு முன்னுரைப்பை -9 விழுக்காட்டுக்கும் -8 விழுக்காட்டுக்கும் இடையே குறைத்துள்ளது. இந்த முன்னுரைப்பு முன்னதாக -2 விழுக்காட்டுக்கும் 0 விழுக்காட்டுக்கும் இடையே இருந்தது.
தற்போதைய மாற்றங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் கண்காணித்து வருவதாக அதன் தலைமை பொருளியல் நிபுணர் எட்வர்ட் ராபின்சன் தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரின் பொருளியல் கொள்கைகளை ஆணையம் மறுஆய்வு செய்யும்போது இவைக் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.