துடுப்புப் படகு விபத்தில் எண்டாவ் கடற்பகுதியில் காணாமல் போன இரு சிங்கப்பூரர்களில் ஒருவரான திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது.
ஃபேஸ்புக் பக்கத்தில் தமது தாயாரை பற்றி பகிர்ந்துகொண்ட 24 வயது திரு லூவிஸ் பாங் திருமதி புவா சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
“இப்போது நீங்கள் சுதந்திரமாக சிறகை விரித்து பறக்கலாம். உங்களை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறுதியளிக்கிறேன்,” என்று குறிப்பிட்ட அவரது ஃபேஸ்புக் பதிவேற்றத்தில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
மலேசியாவில் திரெங்கானு அருகே உயிர் காப்பு உடை அணிதிருந்த அந்த மாதின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதை மலேசிய அதிகாரிகள் நேற்று முன் தினம் உறுதிப்படுத்தினர். ஆனால், அந்த உடல் யாருடையது என்பதை அவர்கள் அப்போது அடையாளம் காணவில்லை.
அந்த உடல், மெர்சிங்கின் எண்டாவ் கடற்பகுதியில் காணாமல் போன இரண்டு சிங்கப்பூர் துடுப்பு (கயாக்) படகோட்டிகளில் ஒருவரான திருவாட்டி புவா ஜியோக் டின், 57, என்பவருடையதா என்று உறுதிப்படுத்த அதிகாரிகள் அந்த மாதின் உறவினர்களை நேற்று அணுகியதை அடுத்து அவரது சடலம் தமது மகனால் இன்று அடையாளம் காணப்பட்டது.