புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தானியங்கி விற்பனைக் கூடங்களை சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் முன்னோட்ட முயற்சியாகச் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
‘ஆக்டோபாக்ஸ்’, ‘ஓஎம்ஓ ஸ்டோர்’, ‘பிக் & கோ’ ஆகிய மூன்று சிங்கப்பூர் வர்த்தக நிறுவனங்கள் புதிய தானியங்கி கடைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்துவது தொடர்பான திட்டங்களை அறிவித்தன.
கடைகளுக்குள் நுழைய உள்ளங்கைகளை ஸ்கேன் செய்யும் முறை, அலமாரிகளில் இருந்து எடுத்துக்கொண்ட பொருட்களைக் கண்காணிக்கவும் விற்பனை செய்யவும் ‘ஆர்எஃப்ஐடி’ தொழில்நுட்பம், கடைக்கு வருபவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு போன்றவை பயன்படுத்தப்பட உள்ளன.
வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்களைக் கண்டறிந்து பொருள்களைக் காட்சி பெட்டகத்தில் வைப்பதற்காக தரவு பகுப்பாய்வும் செய்யப்படலாம்.
‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் ஆதரவுடன் தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளை, சில்லறை விற்பனையாளர்கள் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் சில்லறை வர்த்தக தொழில்துறை மாநாடு, கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
வளர்ந்து வரும் இணைய வர்த்தகப் போட்டியாளர்களிடையே தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதில் உள்ள சிரமத்தைச் சமாளிக்கவும் சில்லறை விற்பனைத் தொழில்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் அங்கமாக இந்தப் புத்தாக்கத் தீர்வுகள் அமைந்துள்ளன.
சில்லறை வர்த்தகர்களின் இந்த புத்தாக்கத் தீர்வுகள் ஊக்கமளிப்பவையாக இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
“சிரமமான காலகட்டத்தில்கூட நாம் தொடர்ந்து புத்தாக்கம் மிகுந்த புதிய தீர்வுகளை முயன்று பார்க்கிறோம். இந்த தொழில்துறை நல்ல நிலைமைக்கு வரும் என்ற நம்பிக்கையை இது தருகிறது,” என்றார் அவர்.
தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள் பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை குறைவே.
தானியங்கி, ரொக்கமில்லா பரிவர்த்தனை வழங்கும் ‘சியர்ஸ்’ கடையை என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடங்கியது.
புதிய கடைகள் முன்னோட்ட முயற்சியாக பல்கலைக்கழகங்களில் திறக்கப்படுகின்றன.
உலகப் பொருளியல் மந்தமடைந்து வரும் நிலையில் வர்த்தகம் கடுமையான காலகட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு சான், நமது ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், தற்போதைய மந்தநிலையைச் சமாளிப்பதுடன் வளமான காலத்துக்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம் என்றார்.