ஹாங்காங்கில் நேற்று 11வது வாரயிறுதிப் போராட்டம் நடைபெற்றபோது காலையில் அதிகமாகவும் பின்னர் லேசாகவும் மழை கொட்டியது. மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஹங் ஹோம் மாவட்டத்தில் போராட்டம் நடத்த அவர்களுக்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்கியது. ‘இது புரட்சிக்கான நேரம். ஹாங்காங்கை விடுதலை செய்’ என்னும் முழக்கங்கள் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றன.
சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக கடந்த இரு மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்தில் அமைதி ஊர்வலமாக இருந்து பின்னர் வன்முறையாக அந்தப் போராட்டம் உருவெடுத்திருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது போலிசாருடன் கைகலப்பு, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என அமைதியற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இருப்பினும் நேற்றைய ஆர்ப்பாட்டம் அமைதியாகவே நடைபெற்றது. மழை பெய்தபோதிலும் பெரும்பாலானவர்கள் குடைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். இளையர்கள் வழிநடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் பங்கேற்று எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியளிக்கப்படாத பகுதிகளுக்குள்ளும் நேற்று நுழைந்ததாக போலிசார் தெரிவித்தனர். அதனால் பல இடங்களில் போக்குவரத்து நிலைகுத்தியதாகவும் குறிப்பாக மோங்காக் பகுதிக்கு அனுமதி இன்றி அவர்கள் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்கள் தெரிவித்ததற்கு இணங்க மோங்காக் தெருக்களில் திரண்ட பொதுமக்கள் போலிசாருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அதேநேரம் அரசாங்கத்தையும் போலிசையும் ஆதரித்தும் சிலர் போட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.