சுத்திகரிக்கப்பட்ட நீருக்காக ஜோகூர் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரை நம்பியிருக்காது என மலேசிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் ஸேவியர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூரின் சுத்திகரிக்கப்பட்ட நீரின் விநியோகத்தை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கு ஜோகூரிலேயே போதுமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதே வழி என்று அவர் கூறினார்.
“ஜோகூருக்குப் போதுமான சுத்திகரிக்கப்பட்ட நீர் இருப்பதை நாங்கள் உறுதி செய்யவேண்டும். அதனை சிங்கப்பூரிடமிருந்து பெறும் தேவை இல்லாமல் இருப்பதற்காக நாங்கள் ஜோகூரில் புதிய நீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் திறக்க வழிசெய்யவேண்டும். அத்தகைய நீரை ஒவ்வொரு நாளும் 260 மில்லியன் லீட்டர் அளவுக்குத் தயாரிக்கும் ஆற்றலை நாம் பெறவேண்டும். இதனை 2022ஆம் ஆண்டுக்குள் அடைவது குறித்து எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டுள்ளது,” என்று டாக்டர் ஸேவியர் ஜோகூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த முயற்சி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தண்ணீர் ஒப்பந்தத்தைப் பாதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ஸேவியர், பாதிப்பு ஒன்றும் ஏற்படாது என்று கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.