இரவு நேரத்தில் வழக்கமாகக் கண்ணில் தென்படாத கடல் அலைகள் சென்னையின் கடற்கரையோரத்தில் நீல நிற ஒளி வீசின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதனைக் கண்டவர்களில் சிலருக்குச் சொல்லி மாளாத அளவுக்கு வியப்பு ஏற்பட்டது. பார்ப்பவர்களைப் பரவசமாக்கும் இந்த அலைகளின் படங்கள் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டன. எதனால் இப்படி ஏற்பட்டது என்று பலரும் சமூகத் தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, இஞ்சம்பக்கம் கடற்கரை ஆகியவற்றில் இந்த அதிசயம் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
‘பையோலுமினெசன்ஸ்’ என்பதால் இந்த அலைகள் ஒளி வீசுகின்றன. ‘பையோலுமினெசன்ட் பைட்டேபிளேங்க்டன்’ என்ற வகையைச் சேர்ந்த பாசியால் இது ஏற்படுகிறது.
சமுத்திர அலைகள் கரைபுரளும் நேரத்தில் இந்தப் பாசிகள் தங்கள் ரசாயன சக்தியை மின்சக்தியாக மாற்றுகின்றன. அப்படி அது மாறும்போது நீல நிற ஒளிக்கதிர்கள் அந்தப் பாசியிலிருந்து வெளிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.