நிதியமைச்சைச் சார்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர பங்காளிகளை முனைப்புடன் ஈடுபடுத்தவுள்ளனர். அத்துடன், ஓய்வுபெறும் வயதும் மறுவேலை வயதும் உயர்த்தப்படுவதைச் சமாளிக்க தொழிலாளர்களுக்கு ஆதரவுத் திட்டத்தையும் நிதியமைச்சு வகுக்கவுள்ளது.
தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு, தொழிற்சங்கவாதிகள், மாணவர்கள், அடித்தளத் தலைவர்கள் ஆகியோரில் பலருடன் பேசியிருப்பதாகத் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட், தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டுக்குள் கட்டாய ஓய்வுபெறும் வயது 63க்கு உயர்த்தப்படும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் அது 65க்கு உயர்த்தப்படும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் பேரணி உரையில் அறிவித்தார். அத்துடன், மறுவேலைக்கான வயது 67லிருந்து 2022ஆம் ஆண்டுக்குள் 68க்கும் 2030ஆம் ஆண்டுக்குள் 70க்கும் உயர்த்தப்படும் என்றும் அந்த உரையில் கூறப்பட்டது.
இது குறித்த கருத்துகளைத் தொழிற்சங்கவாதிகளும் வர்த்தகத் தலைவர்களும் தம்முடன் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னர் பகிர்ந்துகொண்டதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார்.
“அதிக காலம் வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு உதவுவதில் எங்களது முத்தரப்புப் பங்காளிகள் ஒற்றுமையுடன் இருப்பது குறித்து மகிழ்கிறேன்,” என்றார் திரு ஹெங்.
2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் தயாரிப்பையொட்டி இரண்டாம் நிதியமைச்சர்கள் திரு லாரன்ஸ் வோங், குமாரி இந்திராணி ராஜா ஆகியோருடன் முத்தரப்புப் பங்காளிகளை முனைப்புடன் ஈடுபடுத்தப்போவதாகவும் திரு ஹெங் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை மாணவர்கள் உள்ளிட்ட சிங்கப்பூரர்கள் பலர் புரிந்துகொண்டது குறித்து மனநிறைவுடன் இருப்பதாகவும் திரு ஹெங் கூறினார்.