மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வடக்கு நோக்கிய தடத்தில் சிரம்பான் ஓய்வுப் பகுதிக்கு சற்று முன்பாக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர். அந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு லாரிகளும் சிக்கின. அவற்றுள் ஒரு லாரியில் எரிவாயுக் கலன்கள் இருந்தன.
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவருடன் பயணித்தவர், சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் ரவீந்திரன், 26, ஆகிய மூவரும் மாண்டுபோனதாக நெகிரி செம்பிலான் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் தலைவர் இப்ராஹிம் முகமது அப்துல் காதிர் கூறினார். லாரியிலிருந்த எரிவாயுக் கலன்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ‘தி ஸ்டார்’ தெரிவித்தது. படம்: பெர்னாமா