வாழ்வதற்கு உகந்த நகரங்களைப் பட்டியலிட்ட கருத்தாய்வு ஒன்றில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நிதி மையங்கள் அவ்வளவு சிறப்பாகத் தேறவில்லை.
வாழ்வதற்கு உகந்த நிலையை அளவிடும் ‘இகானமிஸ்ட் இன்டெல்லிஜன்ஸ் யூனிட்’ (இஐயு) ஆய்வு நிறுவனத்தின் அனைத்துலகக் குறியீடு ஒன்றில் சிங்கப்பூர் தற்போது 40வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அது 37வது இடத்தில் இருந்தது.
ஆயினும், லண்டன் (48வது இடம்), நியூயார்க் (58வது இடம்) ஆகிய நகரங்களைக் காட்டிலும் பட்டியலில் சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. சிங்கப்பூருடன் அடிக்கடி ஒப்பிடப்படும் ஹாங்காங், பட்டியலில் 38வது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கில் அண்மைய அரசியல் பதற்றநிலை ஏற்படுவதற்கு முன்னதாக இப்படியலில் நகரங்கள் தரவரிசை படுத்தப்பட்டதால் அதன் தாக்கம் ஹாங்காங்கின் தரவரிசையைப் பாதிக்கவில்லை. ஆயினும், ஹாங்காங்கின் உள்நாட்டுப் பிரச்சினையால் அடுத்த ஆண்டுக்கான தரநிலைப்பட்டியலில் ஹாங்காங் சறுக்கிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்வதற்கு ஆக உகந்த நகரங்கள் பொதுவாகவே பரபரப்பும் விறுவிறுப்பும் மிகுந்த பெருநகர்களாக இல்லாமல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வட்டார நகரங்களாக இருப்பது இந்தத் தரவரிசையின் மூலம் புலப்படுகிறது.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இப்பட்டியலின் முதலிடத்தை ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா தக்கவைத்துக்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன், சிட்னி, அடிலெய்ட் ஆகிய மூன்று நகரங்களும் கனடாவின் கெல்கரி, வான்கூவர், டொரோண்டோ ஆகியவை பட்டியலின் தலைசிறந்த 10 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானின் ஒசாகா, தோக்கியோவுடன் டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் ஆகிய நகரங்களும் முதல் 10 நகரங்களில் இடம்பெறுகின்றன. இந்தியத் தலைநகர் புதுடெல்லி கடந்தாண்டின் 112வது இடத்திலிருந்து இவ்வாண்டு 118வது இடத்திற்கு சரிந்தது. இதேபோல மும்பை, 117வது இடத்திலிருந்து 119வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
உயர்தரக் கல்வி, சிறந்த நிதியாதரவு பெற்றுள்ள பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறை, சீராக இயங்கும் போக்குவரத்து உள்ளிட்ட சில அம்சங்களின் அடிப்படையில் இந்த நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருப்பதாக ‘இஐயு’வின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.