சிங்கப்பூரின் அடுத்த பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஏப்ரல்- மே மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் இவ்வாண்டின் இறுதிக்குள் நடப்பது மக்கள் செயல் கட்சிக்குச் சாதகமாக இருக்கும். ஆண்டிறுதிக்குள் மக்கள் செயல் கட்சியால் தங்களது வளங்களைத் தயார்ப்படுத்த முடியும். எதிர்க்கட்சியினருக்கோ இது சிரமமாக இருக்கும் என கருதப்படுகிறது.
வேறு சில கவனிப்பாளர்களோ, இந்தத் தேர்தல் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என ஊகிக்கின்றனர். அடுத்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு கிடைக்கப்பெறும் நிதியுடன் அடித்தள நிலையில் சில அக்கறைகளைக் கையாளுதல் உள்ளிட்ட சிலவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊகம் எழுந்துள்ளது.
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளையும் பிரிவுகளையும் மறுஆய்வு செய்யும் குழு அமைக்கப்பட்ட தகவல் நேற்று வெளிவந்ததைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவடைந்துள்ளன. தற்போதுள்ள 13 தனித்தொகுதிகளை அதிகரிக்கும் சாத்தியத்தையும் அந்தக் குழு கருத்தில் கொள்ளவேண்டும்.
பொதுத்தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படவேண்டும். ஆனால் பொருளியல் மேலும் நலிவடைந்தால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவது ஆளும் கட்சிக்கு ஆதாயமளிக்கும் என்று முன்னாள் மசெக நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலின் படிநிலைகள் இவை:
1. தேர்தல் தொகுதி எல்லைகளையும் பிரிவுகளையும் மறுஆய்வு செய்யும் குழுவின் உருவாக்கம்
2. தேர்தல் எல்லைகள், பிரிவுகள் குறித்த அறிக்கை வெளியீடு
3. நாடாளுமன்றம் கலைப்பு; தேர்தல் நாள் அறிவிப்பு
4. வேட்பாளர் நியமன தினம்
5. வாக்களிப்பு தினம்