புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘லேண்டர்’ விக்ரமின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவைச் சுற்றி வர ‘ஆர்பிட்டர்’, நிலவில் தரையிறங்க ‘லேண்டர்’ விக்ரம், நிலவில் ஆய்வு செய்ய ‘ரோவர்’ பிரக்யான் என மூன்று பகுதிகளை அந்த விண்கலம் உள்ளடக்கியிருந்தது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2, ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. திட்டமிட்டபடி நேற்று முன்தினம் அதிகாலையில் ‘லேண்டர்’ விக்ரம், நிலவில் தரையிறங்குவதாக இருந்தது. நிலவை அடைய 2.1 கிலோமீட்டர் தொலைவே இருந்தபோது, ‘லேண்டர்’ விக்ரமுக்கும் தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘ஆர்பிட்டர்’ எடுத்த புகைப்படத்தில் ‘லேண்டர்’ விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, அதனுடனான தொடர்பை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்றும் திரு சிவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பாராட்டுத் தெரிவித்தது. இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் தங்களுக்குப் புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட நாசா, எதிர்காலத்தில் இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கிறது.
ஜப்பானுடன் கூட்டுமுயற்சி
இதனிடையே, நிலவை ஆராய்வது தொடர்பிலான தனது அடுத்த திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து, மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அடுத்த முறை, நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கி ஆய்வு செய்வதோடு நின்றுவிடாமல், அங்கிருந்து மாதிரிகளைச் சேகரித்து வரவும் இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. இதன் தொடர்பில், ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையமான ‘ஜக்சா’வுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் இஸ்ரோ அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தப் படவுள்ள நிலையில், நிலவை ஆராயும் இஸ்ரோ-ஜக்சாவின் கூட்டு முயற்சி 2024ல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.