ஒரு வார விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கத் தயாராகியுள்ளது. ஆயினும், சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் புகைமூட்ட நிர்வாக முறைகளை தேவைக்கேற்ப செயல்படுத்தவும் தயாராக இருப்பதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் நலனை அதிமுக்கியமாகக் கருதுவதாகக் கூறிய கல்வியமைச்சு, பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் சிறப்புத் தேவை பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஏற்கெனவே நுரையீரல் அல்லது இதய பிரச்சினைகளைக் கொண்ட மாணவர்களையும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பர் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரின் காற்றுத்தரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சற்று மேம்பட்டு வந்தது. தீவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழைத் தூறலுக்கு இடையே பிஎஸ்ஐ குறியீடு சற்று குறைந்துள்ளது.
24 மணி நேரத்திற்கான குறியீட்டின் அளவு, மாலை 5 மணியளவில் சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் 100க்கும் தெற்குப் பகுதியில் 108க்கும் இடையே இருந்தது. இது, காலையில் கிழக்குப் பகுதியில் 107க்கும் மேற்குப் பகுதியில் 124க்கும் இடையே பதிவான குறியீட்டின் அளவைக் காட்டிலும் குறைவு.
தீவெங்கிலுமுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்ஐ குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
101க்கும் 200க்கும் இடைப்பட்ட குறியீடு ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.
பிஎஸ்ஐ குறியீட்டைப் பொறுத்தமட்டில் சிறிதளவு முன்னேற்றம் தென்பட்டாலும் புகையின் அடர்த்தியைக் கணிக்கும் ‘பிஎம் 2.5’ என்ற அளவீட்டில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
காலை எட்டு மணி அளவில் கிழக்குப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 26 மைக்ரோகிராமுக்கும் மத்தியப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 37 மைக்ரோகிராமுக்கும் இடைப்பட்டிருந்தது. இதுவே மாலை ஐந்து மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கான ‘பிஎம் 2.5’ அளவீடு தீவின் மத்தியப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 49 மைக்ரோகிராமுக்கும் மேற்குப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 63 மைக்ரோகிராமுக்கும் இடைப்பட்டுள்ள அளவுக்குக் குறைந்தது.