சிங்கப்பூரின் காற்றுத்தரம் தற்போது மிதமான நிலையில் உள்ளது. ஒரு வார செப்டம்பர் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல திறந்தன.
24 மணி நேரத்திற்கான குறியீட்டின் அளவு, திங்கட்கிழமை (16 செப்டம்பர்) காலை 11 மணியளவில் ஒட்டுமொத்தமாக 85க்கும் 97க்கும் இடைப்பட்டிருந்தது. இன்று மாலை 5 மணியளவில் அளவில் அது 75க்கும் 83க்கும் இடைப்பட்டிருந்தது.
காற்றுத் தூய்மைக்கேட்டைச் சமாளிக்க முறையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் அவை செயல்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு நேற்று கூறியது.
மாணவர்களின் நலனை அதிமுக்கியமாகக் கருதுவதாகக் கூறிய கல்வியமைச்சு, பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், சிறப்புத் தேவை பள்ளிகள் ஆகியவற்றில் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே நுரையீரல் அல்லது இதய பிரச்சினைகள் உள்ள மாணவர்களையும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பர் என்று அமைச்சு கூறியது.
இதற்கிடைய தேசிய சுற்றுப்புற வாரியம், புகைமூட்டத்தைச் சமாளிக்க பொதுமக்கள் என்ன செய்யலாம் என்பது பற்றிய காணொளி ஒன்றை டுவிட்டரில் இன்று வெளியிட்டது:
சிங்கப்பூர் ஆயுதப்படை
ராணுவ வீரர்கள் எந்தச் சூழ்நிலைக்கும் தயாராவதை உறுதி செய்வதற்காக சிங்கப்பூரின் ராணுவ முகாம்களில் பயிற்சிகள் முடிந்த அளவில் வழக்கம்போல நடத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
பிஎஸ்ஐ குறியீட்டளவு 100ஐ தாண்டினால் வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
“புகைமூட்ட சூழ்நிலை என்னவாயிருந்தாலும், சிங்கப்பூரின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய சிங்கப்பூர் ஆயுதப் படை தயாராக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.