தம்மை பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்படுவதை நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அண்மையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசியதாக தமிழக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை தம் மீது குத்தப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்று ரஜினி கூறியிருக்கிறார்.
ஆன்மிகப்பாதையில் செல்லப்போவதாகக் கூறியதால் சிறுபான்மையினரிடம் இருந்து தம்மை விலக்கிவைக்க சிலர் முயன்று வருவதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் கட்சி ஒன்றை தாம் உறுதியாக ஆரம்பிக்க இருப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், தமது வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
அப்போது அரசியல், மக்கள் நலன் தொடர்பாக பல முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டதென மன்ற நிர்வாகிகள் தெரிவித்ததாக நாளேடு கூறியது.
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்து ரஜினி கேட்டறிந்ததோடு அடுத்த ஆண்டு மக்கள் மன்ற மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்தும் அதற்கான இடம் குறித்தும் அவர் ஆலோசித்தார்.
ரஜினி எப்போது அரசியலுக்கு நேரடியாக வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் 2017 டிசம்பர் 31ஆம் தேதி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசும்போது, தாம் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார்.
“தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிற்போம்,” என்று ரஜினி அப்போது அறிவித்தார்.
இந்தித் திணிப்பை மக்கள் ஏற்கமாட்டார்கள்
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்
களிடம் பேசிய ரஜினி, “இந்தித் திணிப்பை தமிழகம் மட்டுமல்லாது தென் இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் ஏற்காது,” என்றார். மேலும் அவர், “எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்தும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது.
“துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொதுவான மொழியைக் கொண்டுவர முடியாது. எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது,” என்றார்.