சைனாடவுன் வட்டாரத்தில் டாக்சி, காருக்கிடையே நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த டாக்சி ஓட்டுநரும் டாக்சியில் இருந்த இரு பயணிகளும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இயூ டோங் சென் ஸ்திரீட், அப்பர் கிராஸ் ஸ்திரீட் சாலைச் சந்திப்பில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதில் 62 வயது டாக்சி ஓட்டு நரும் 27, 29 வயதுடைய பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி, மின்கம்பம் ஒன்றின் மீது மோதி சேதமடைந்ததை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்
படங்கள் காட்டின. விபத்தில் சம்பந்தப்பட்ட வெள்ளை நிற சொகுசு காரும் மோசமாகச் சேதமடைந்தது.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத் தலைமை செய்தித் தொடர்பு அதிகாரி டேமி டான், காயமடைந்த டாக்சி ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளைத் தமது நிறுவனம் தொடர்புகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மருத்துவமனையிலிருந்து ஒரு பயணி வீடு திரும்பிவிட்டதாகக் கூறிய அவர், டாக்சி ஓட்டுநரும் மற்றொரு பயணியும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.

