வெளிநாடுகளுடனான உறவுகளைச் சிறிய நாடுகள் கவனமாகக் கையாளாவிடில், பெயரளவிற்கு இறையாண்மையுடன் கூடிய அல்லது சுதந்திரமான நாடு என்றிருந்தாலும் தங்களது தலைவிதியைத் தீர்மானிப்பதில் அந்நாடுகளின் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இதனால், தங்களது பொதுவான நலன்களை மேம்படுத்தி, உலகில் தங்களது செல்வாக்கை வலுப்படுத்த, சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று திரு லீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'சிறிய நாடுகளுக்கான கருத்தரங்கு' என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு நேற்று முன்தினம் பிரதமர் லீ சிறப்பு விருந்தளித்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குமுன் 16 உறுப்பு நாடுகளுடன் சிங்கப்பூரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது 107 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
"சிறிய பொருளியலைக் கொண்டுள்ள நாம், நிலையில்லாத உலகப் பொருளியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடும்," என்றார் அவர்.
"ஒரு போர் வந்தால், நம்மைத் தற்காக்க போதிய உத்திபூர்வ வலிமையை நாம் கொண்டிருக்கவில்லை. அதேபோல, இயற்கைப் பேரிடர் நிகழ்ந்துவிட்டால் அதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம். பல்வேறு பாதிப்புகள் வந்தாலும் பெரிய நாடுகளால் தாக்குப்பிடிக்க முடியும். ஒருவேளை சிங்கப்பூர் நாளை இல்லாமல் போனால், அதனால் உலகிற்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் இருக்காது," என்று திரு லீ பேசினார்.
ஆயினும், சிறிய நாடுகள் தங்களுக்கென சில அனுகூலங்களைக் கொண்டுள்ளன என்றும் மாறி வரும் சூழல்களுக்கேற்பவும் வேகமாகவும் அந்நாடுகள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், ஐநா போன்ற உலக அமைப்புகளில் தங்களது செல்வாக்கை வலுப்படுத்த சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
ஐநா பொதுச் சபையின் ஆறு முதன்மைக் குழுக்களில் ஐந்தில் 'சிறிய நாடுகளுக்கான கருத்தரங்கு' அமைப்பின் உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிய அவர், அதேபோல ஐநா பாதுகாப்புச் சபையில் அந்நாடுகள் இடம்பெற்று சேவையாற்றியதையும் அது தொடரும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
நியூயார்க்கில் உள்ள ஐநாவிற்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 40 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட 60 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

