பிரதமர் லீ: தேர்தலைச் சந்திக்க மசெக தயார்

பிரதமர் லீ: தேர்தலைச் சந்திக்க மசெக தயார்

2 mins read
0b181e11-4cc0-4bc2-97a2-36d067223fc3
படம்: கேவின் ஃபூ, எஸ்டி -

மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நான்காம் தலைமுறைத் தலைவர்கள் அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றனர் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ள அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர் என்று திரு லீ கூறி இருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் லீ நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அதன்பின் சிங்கப்பூர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, மசெகவின் தலைமைச் செயலாளருமான அவரிடம், அடுத்த பொதுத் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, "எந்த நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் பதில் அளித்தார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதற்கு முதல்படியாக, தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்வதற்கான குழு தனது முதல் கூட்டத்தை இம்மாதம் நடத்தியதாக தேர்தல் துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூர் பொருளியல் சிரமமான காலகட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் கட்டுப்படியாகும் அளவில் இருப்பதை உறுதிசெய்வது போன்ற நடைமுறைப் பிரச்சினைகளைத் தலைவர்கள் கையாள வேண்டியுள்ளது என்றும் சொன்னார்.

இந்தச் சிரமமான காலகட்டத்தில் இருந்து விடுபட சிங்கப்பூரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சில காலமாக அரசியலில் இருந்து வருவதால் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் அந்தப் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"அரசியலுக்கு வருவதற்குமுன், அந்தத் தலைவர்களில் பலரும் பொதுச் சேவைத் துறையில் பணியாற்றியுள்ளனர். ஆகையால், அந்தப் பிரச்சினைகள் அவர்களுக்குப் பரிச்சயமானதுதான்," என்றார் பிரதமர்.

ஆனாலும், முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்புகளில் இல்லாத வரை, ஒருவர் எவ்வளவு உழைத்தாலும் அது அவரை நூறு விழுக்காடு தயாரானவராக ஆக்கிவிடாது என்றும் அவர் சுட்டினார்.

"அவர்களுக்கு இருக்கும் சிறந்ததோர் அனுகூலம் என்ன எனில், அவர்கள் வயதானவராக அல்லது இளையராக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக, அவர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்யும் வகையில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்றலாம். அவர்கள் வெற்றிபெற நாங்கள் விரும்புகிறோம். அவர்களே சிங்கப்பூர் குழுவினர்," என்று திரு லீ தெரிவித்தார்.

"இது தலைவர்களின் குழு மட்டுமல்ல. உண்மையில், தங்களுக்கு இடையில் பிணைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்தவல்ல இளம் அமைச்சர்கள் மற்றும் இளம் சிங்கப்பூரர்களின் குழு இது," என்றார் அவர்.

"நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில், நமக்கு முன்னே கடினமான பாதை இருந்தாலும் முன்னேறிச் செல்வதற்கான வழியைக் காணலாம். ஆதலால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, சிங்கப்பூர் குழுவை ஆதரித்து, சிங்கப்பூரர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒன்றாக முன்னேறிச் செல்வோம். கிட்டத்தட்ட உலகின் மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம்," என்றும் அவர் சொன்னார்.