காட்டுத்தீயால் இந்தோனீசியாவின் ராவுங் மலையருகே சிக்கியிருந்த ஏழு சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் அடங்கிய மலையேறும் குழுவில் இந்த சிங்கப்பூரர்கள் அடங்குவர். வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீச் சம்பவங்களால் மலையேறுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாதையில் செல்ல முடியவில்லை. அதனால் பயணத்தைத் தொடர முடியாமல் மலையேறிகள் ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டனர். அன்றிரவே 25 பேர் அடங்கிய மீட்புக் குழுவை இந்தோனீசிய தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
சிக்கியிருந்தவர்களை மீட்புப் படையினர் கண்டுபிடித்ததும் முதலில் மருத்துவ உதவி செய்தனர். எழுவருக்கும் சிறு தீப்புண் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் வழியில் உணவும் ஓய்வும் கொடுத்து வெற்றிகரமாக அவர்களை மலைப்பகுதியிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டனர். எழுவரும் நேற்று முன்தினம் மாலை சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

