சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான முறைசாரா சந்திப்பு இந்தியா-சீனா உறவுக்கு மேலும் உந்துசக்தியை அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான, ‘சென்னைகனெக்ட்’ என அழைக்கப்பட்ட இந்த 2வது முறைசாரா சந்திப்பில் கலந்துகொள்ள திரு ஜின்பிங் நேற்று முன்தினம் சென்னை சென்றடைந்தார். முதல் நாளன்று மாமல்லபுரச் சிற்பங்களையும் அங்கு நடந்த கலைநிகழ்ச்சிகளையும் தலைவர்கள் இருவரும் கண்டு ரசித்தனர்.
தலைவர்கள் இருவரும் நேற்று இரண்டாவது நாளாகவும் சந்தித்துப் பேசினர். அதிகாரிகள் மட்ட அளவிலான பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. பிறகு திரு ஜின்பிங்கிற்கு திரு மோடி நண்பகல் விருந்து அளித்துச் சிறப்பித்தார்.
இந்தியா-சீனா இடையிலான இரண்டாவது முறைசாரா உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தமைக்காக திரு ஜின் பிங்கிற்கு நன்றி கூறிக்கொண்ட அவர், மாநாட்டைச் சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரு மோடியுடன் தாம் இதயபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தாமும் அவரும் நெருங்கிய நண்பர்கள்போல் பேசியதாகவும் திரு ஜின்பிங் கூறினார்.
தாமும் தம் குழுவினரும் மிகச் சிறப்பாக உபசரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு மொத்தம் ஆறு மணி நேரம் நடந்ததாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது முறைசாரா சந்திப்பு என்பதால் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆயினும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீட்டுக்குச் சேவைகளைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் சிக்கல்களைத் தீர்க்கவும் புதிய முறையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என திரு கோகலே சொன்னார்.
வட்டார அளவிலும் உலக அளவிலும் முக்கியமான விவகாரங்களில் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பில் கூடுதல் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்தை வேரறுப்பதில் ஒன்றிணைந்து செயல்படுவது போன்ற அம்சங்கள் குறித்து பேசப்பட்டது என்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் விவரித்தார். அடுத்த ஆண்டு சீனா வருகை தருமாறு திரு ஜின்பிங் விடுத்த அழைப்பை திரு மோடியும் ஏற்றுக்கொண்டார்.
பின் திரு ஜின்பிங், நேப்பாளத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.