ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டோர் வீடு திரும்ப உதவ நீ சூன் சவுத் வட்டாரத்திலும் சொங் பாங் வட்டாரத்திலும் உள்ள புளோக்குகளுக்கு புதிதாக சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களில் சாயம் பூசப்படும்.
பல பிரிவுகளைக் கொண்ட கார் நிறுத்துமிடங்களைப் போல இந்த புளோக்குகளில் சில சின்னங்களும் இடம்பெறும். சிவப்பு நிற புளோக்குகளுக்கு ‘அன்னாசி’ சின்னம், நீல நிற புளோக்குகளுக்கு மீன் சின்னம், பச்சை நிற புளோக்குகளுக்கு ரப்பர் மரச் சின்னம் போன்ற சின்னங்கள் ஒதுக்கப்படும். இந்த அம்சங்களுடன் அதிக ஓய்வு இடங்கள், மேலும் தெளிவான அறிவிப்புப் பலகைகள் போன்ற சில உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான திட்டங்கள் நேற்றுக் காலை வெளியிடப்பட்டன.
ஞாபகமறதி நோயைப் பற்றிய நிபுணத்துவத்தைப் பெற்றுள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையின் முதியோர் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஃபிலிப் யாப் போன்றோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் புதிய அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஞாபகமறதி நோய் உள்ளோரின் உடல் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுகளை ஈடுகட்டுவது இந்த அம்சங்களின் நோக்கம் என்று டாக்டர் யாப் கூறினார்.
“ஞாபகமறதி நோய் உள்ள ஒருவர் திடீரென உதவி கேட்டால் அல்லது அவர் காணாமல் போனது போல் காணப்படுவதைப் பிறர் பார்த்தால், எந்த புளோக்கில் குடியிருக்கிறார் என்பதை அவரால் சரியாக நினைவுப்படுத்த இயலாவிட்டாலும் அதன் நிறத்தையோ அல்லது சின்னத்தையோ அவர் நினைவுகூரலாம். அவர் தங்கும் இடத்துக்கு மக்கள் அவரை அழைத்துச் செல்வதற்கு இது உதவும்,” என்றார் டாக்டர் யாப்.
நீ சூன் சவுத் அடித்தள அமைப்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான அமைப்பு, நீ சூன் நகர மன்றம், கூ டெக் புவாட் மருத்துவமனை, மான்ஃபர்ட் கேர் சமூக அமைப்பு நடத்தும் குட்லைஃப் ஈசூன் நிலையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்தத் திட்டம் உள்ளது.
நீ சூன் சவுத் சமூக மன்றம், சொங் பாங் நகரம் உள்ளிட்ட அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் இந்தத் திட்டத்திற்காக சில புளோக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதுபற்றி அறிவித்த நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா, 60 வயதுக்கும் மேற்பட்டோரில் பத்தில் ஒருவருக்கு ஞாபகமறதி நோய் இருப்பதைச் சுட்டினார்.
“2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு புளோக்கிலும் ஒருவருக்கு ஞாபகமறதி நோய் இருப்பதாக நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். எனவே, நமது சமூகத்தை ஞாபகமறதி நோயாளிகளுக்கு உகந்த விதத்தில் உடனடியாக அமைக்கவேண்டும். ஞாபகமறதி நோயாளி ஒருவர் கீழே சென்று காப்பி அருந்தி, நண்பர்களுடன் பேசி சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் விதமாக அதனை மாற்றவேண்டும். இதனால் அவர்களுக்கு அந்நோயின் தாக்கம் மெதுவடையும்,” என்று திருவாட்டி லீ தெரிவித்தார்.
வெளி இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது வீடு எங்கே உள்ளது என்பதை மறந்துபோவது ஞாபகமறதி நோய் உள்ளவர்கள் எதிர்நோக்கும் ஒரு சவால் என்று அவர் குறிப்பிட்டார். குடியிருப்புகளில் தங்களது வழியைக் கண்டுபிடிக்க இத்தகையோருக்கு இந்த புதிய அம்சங்கள் கை கொடுக்கும் என்றார் திருவாட்டி லீ.
“ஞாபகமறதி நோய்க்கு உகந்த உள்கட்டமைப்பு கொண்ட சிங்கப்பூரின் முதல் சமூகமாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் சோதனைத் திட்டம் மற்ற சமூகங்களையும் இதுபோல செய்யத் தூண்டும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.