மூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்

மூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்

2 mins read
a36529b5-a751-4bf9-b660-2035be3bffee
அங் மோ கியோ அவென்யூ 6 வழியாக ஸு காய் ஸியாங் ஓட்டிச் சென்ற லாரி மோதியதால் மூன்று நடை பாதையர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோப்புப்படம்: எஸ்டி -

விபத்தில் மூன்று நடைபாதையர் கொல்லப்பட்ட சம்பவத்தில் லாரியை ஓட்டிய ஓட்டுநர், தகுந்த உரிமமும் காப்புறுதியும் இல்லாமல் வாகனம் ஓட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஸு காய் ஸியாங்குக்கு, வயது 27, 1,400 வெள்ளி அபராதமும் ஓராண்டு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி மூவருக்கு மரணம் விளைவித்ததாக அவர் மீது 3வது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆனால் மரண விசாரணை வெளியாகாத நிலையில் அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் சாட்சியங்களைப் பொருத்து அவர் மீது எதிர்காலத்தில் குற்றம் சுமத்தப்படலாம்.

சம்பவத்தன்று திரு ஸு தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

காலை 9.30 மணி அளவில் மேரிமவுண்ட் சாலையை நோக்கி அங் மோ கியோ அவென்யூ 6 வழியாக அவர் லாரியை ஓட்டிச் சென்றபோது மூன்று நடைபாதையர்கள் மீது லாரி மோதியது.

திரு சுவா செங் தோங், வயது 86, அவரது மகள் கினா சுவா அயி வா, வயது 58, குடும்ப நண்பர் யாப் சூன் ஹுவாட், வயது 63 ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஸுவுக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது அவரிடம் 'கிளாஸ் 3A' உரிமம் மட்டுமே இருந்தது. லாரி ஓட்டுவதற்குத் தேவையான 'கிளாஸ் 3' உரிமம் அவரிடம் இல்லை.

ஆனால் 'கிளாஸ் 3' (Provisional Driving Licence) பயிற்சி உரிமத்துக்கு விண்ணப்பித்து அவர் அதனை பெற்றிருந்தார்.

ஸு தனது தந்தையிடம் 'கிளாஸ் 3A' உரிமம் மட்டுமே தன்னிடம் உள்ளது என்பதை தெரிவிக்கவில்லை.

இதனால் அவரது தந்தை ஸுவிடம் 'கிளாஸ் 3' உரிமம் இருப்பதாக நம்பி லாரியை ஓட்ட அனுமதித்திருந்தார்.

உரிமம் இல்லாமலும் காப்புறுதி இல்லாமலும் வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு தலா ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 1,000 வெள்ளி அபராதமும் மூன்று மாதம் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கலாம்.