தவறான மாத்திரைகளை உட்கொண்டதால் நோயாளி மரணமடைந்ததையடுத்து, அவருக்கு அந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்த 75 வயது மருத்துவர் ஹரிதாஸ் ராமதாஸ் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவின் சந்தர் ரோட்டில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர் ஹரிதாஸ், நோயாளியான சவரிமுத்து அருள் சேவியர் என்பவரைத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி நோயை உறுதிப்படுத்தாமலேயே, 10 மெதோட்ரெக்சேட் (எம்டிஎக்ஸ்) மாத்திரைகளுக்கு (‘கீமோதெரபி’ எனும் வேதிசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் மட்டுப்படுத்தக்கூடியது) மருந்துச் சீட்டு கொடுத்தார். அத்துடன், 10 ப்ரெட்னிசலோன் மாத்திரைகளையும் (புற்றுநோய் உட்பட சில நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுவது) குளோர்ஃபெனிரமின் (ஒவ்வாமையைக் குணப்படுத்தப் பயன்படுவது) மாத்திரைகளையும் சேவியருக்குப் பரிந்துரைத்தார் மருத்துவர்.
அவர் பரிந்துரைத்த மருந்தின் அளவும், வழிகாட்டிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்ட அளவில் இல்லை. இந்தத் தகவல் இம்மாதத் தொடக்கத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது.
மருத்துவரின் எச்சரிக்கையற்ற செயலால் ஒருவர் மரணமடைந்ததன் தொடர்பில் குற்றவியல் சட்டப்பிரிவு 304A(a)-ன்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட முதல் வழக்கு இது.
வெளிநாட்டவரான திரு சேவியருக்கு ‘தேக்கா கிளினிக் சர்ஜரி’ எனும் மருந்தகத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி டாக்டர் ஹரிதாஸ் சிகிச்சை அளித்தார். அப்போது மூச்சுக் கோளாறுகள், ஒவ்வாமை போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சேவியருக்கு டெக்சாமெதாசோன் எனும் ‘ஸ்டெராய்ட்’ மருந்தை ஊசி மூலம் செலுத்தினார் அவர்.
தாம் பரிந்துரைத்த மாத்திரைகளில் ஒவ்வொரு வகையிலும் வேளைக்கு ஒன்று என்ற வீதத்தில் நாளுக்கு இரு வேளை அந்த மாத்திரகளை உட்கொள்ள சேவியர் அறிவுறுத்தப்பட்டார்.
அடுத்த 16 நாட்களுக்குப் பிறகு சேவியர் உயிரிழந்தார்.
நோய்த்தொற்றை எதிர்ப்பதற்கான ரத்த வெள்ளை அணுக்கள் போதுமான அளவு இல்லாத நிலை சேவியருக்கு ஏற்பட்டதற்கு எம்டிஎக்ஸ் மருந்து காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதேபோல, செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படுத்தும் ‘மியூகோசைடிஸ்’ பிரச்சினையும் சேவியருக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இவற்றின் காரணமாக, சேவியருக்குப் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் இறந்துபோனதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடகா பல்கலைக்கழகத்தில் 1971ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர் ஹரிதாஸ், 44 ஆண்டுகள் பொது மருத்துவராகப் பணியாற்றியதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாயிரம் வெள்ளி பிணையில் இருக்கும் அவரது வழக்கு இன்னும் இரு வாரங்களில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஒருவருக்கு நோக்கமில்லா மரணத்தை விளைவிக்கக்கூடிய அளவுக்கு எச்சரிக்கையற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.