ஸ்டாக்ஹோம்: இந்திய பொருளியல் மந்தநிலையில் இருப்பதாகவும் தேவைகள் குறைந்து வருவது அதற்குக் காரணம் என்றும் 2019 பொருளியலுக்கான நோபெல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அபிஜித் பானர்ஜி கோல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும் டெல்லி நேரு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்.
பொருளியல் நிபுணரான அபிஜித், போர்ட் பவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கோல்கத்தாவைச் சேர்ந்த ஒரு செய்தி ஒளிபரப்பு நிறுவனம், அமெரிக்காவில் அபிஜித்திடம் பேட்டி எடுத்தது. அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளியல் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூறமுடியாது.
“கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சியைக் கண்டோம். ஆனால், இப்போது அந்த உறுதிப்பாடும் போய்விட்டது. பொருளியல் மந்தநிலை வேகமாக மோசமடைந்து வருகிறது. வரவு செலவுத் திட்ட இலக்குகள் மற்றும் பண இலக்குகள் வைத்திருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் அனைவரையும் மகிழ்விப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
“ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல், பொருளாதாரத் தேவை குறித்து கவலைப்பட வேண்டும். ஏனெனில் தேவைதான் தற்போதைய பெரிய பிரச்சினை என நினைக்கிறேன்,” என்று தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் அபிஜித்.