மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்தால் அந்நாட்டுடன் மலேசியா அரசதந்திர முறையில் தீர்வு காண முயலும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்ததாக டாக்டர் மகாதீர் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மலேசிய இறக்குமதிகள் சிலவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்தியா யோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் கடந்த வாரம் தகவல் வெளியிட்டது.
இந்தோனீசியாவுக்கு அடுத்து மலேசியா உலகின் ஆகப் பெரிய செம்பனை எண்ணெய் தயாரிப்பாளரும் ஏற்றுமதியாளருமாக உள்ளது.
புறக்கணிப்பு போன்ற நடவடிக்கை ஏதேனும் இந்திய அரசாங்கம் ஈடுபடத் தொடங்கினால் மலேசியா அரசதந்திர ரீதியாக அந்நாட்டுடன் இணக்கம் காண முயற்சி எடுக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு செம்பனை இறக்குமதியை வாங்குவதைச் சில இந்திய வர்த்தகங்கள் நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இருந்தபோதும், வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இந்தியாவிடமிருந்து வரவில்லை என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார். “இது வர்த்தகச் சமூகத்தின் பதில் நடவடிக்கையாகத்தான் உள்ளது. எனவே அவர்கள் எடுத்துள்ள தனிப்பட்ட முடிவுகளுக்கு எதிராக நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க முடியாது,” என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
இந்தியாவிலிருந்து வரும் எருமை இறைச்சி, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகியவற்றை அதிகரிப்பது குறித்து கருதப்போவதாக மலேசியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.